Sunday, 9 October 2016

நாராயணாசாமியும், துப்பாக்கியும்

நாராயணாசாமிக்கு காவல்துறையில் அதிகாரியாக வேலை கிடைத்தது.. முதல்நாள் புல்லட் மோட்டார் சைக்கிளில் கம்பீரமாக பவனி வந்தபோது, வயர்லஸ் கூவிற்று..

"7 வது தெருவுக்கு உடனே செல்லுங்கள்.. அங்கு சட்டவிரோதமாக கூடி நிற்கும் கும்பலைக் கலைத்துவிட்டு அறிக்கை தாருங்கள்.."

சக அதிகாரி துணைக்கு வர 7 வது தெருவுக்கு விரைந்தார் நாராயணாசாமி.

அங்கே எதையோ எதிர்பார்த்துக்கொண்டு ஒரு கும்பல் அமைதியிழந்து நின்றுகொண்டிருந்தது. ஸ்டைலாக போய் இறங்கிய நாராயணாசாமி முழங்கினார்..

"உடனே இடத்தைக் காலி செய்யுங்கள்..! இது என் உத்தரவு..!'

கும்பலில் இருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்..ஆனால் இருந்த இடத்தைவிட்டு நகரவில்லை..நாராயணாசாமிக்கு அவமானமாகப் போய்விட்டது..

சட்டென்று துப்பாக்கியை உருவி, வானை நோக்கிச் சுட்டு மீண்டும் உத்தரவிட்டார்..

"எல்லோரும் உடனே கலைந்து செல்லுங்கள்.. அல்லது அடுத்த குண்டு உங்கள் தலையில் திணிக்கப்படும்..!"

கூட்டம் நாராயணாசாமியை வெறித்துப் பார்த்தவாறே கலைந்து சென்றது..

வெற்றிச்சிரிப்புடன் சக அதிகாரியைக் கேட்டார் நாராயணாசாமி..

"முதல் அசைன்மெண்ட்டே கலக்கிட்டேன்ல..?"

சக அதிகாரி சற்று யோசனையுடன் சொன்னார்,

"மிஸ்டர் நாராயணாசாமி.. நான் அப்படி நினைக்கவில்லை.. தேவையில்லாமல் துப்பாக்கிக் குண்டுகளை வீணாக்கியதற்கும், 6 வது தெருவில் பேருந்துக்காக காத்திருந்தவர்களை விரட்டி அடித்ததற்காகவும் நீங்கள் மேலிடத்தில் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும்..!"

No comments:

Post a Comment