Tuesday, 11 October 2016

நாராயணசாமியும், விவாகரத்து வழக்கும்

தன் மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார் நாராயணசாமி.

பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

"அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?"

"அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க"

"ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?"

"எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?"

"அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது"

"தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடப்படுறதுக்கு"

"கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?"

"அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க"

"வீட்டுக்காரரோட என்ன சண்டை?"

"வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு"

இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.

"எதுக்காக விவாகரத்து கேட்கிறார்" என்று அலறி விட்டு இருமினார்.

"ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?"

நாராயணசாமியின் நிலையை நினைத்து ... நினைத்து ...மயங்கி விழுந்தார் அரசு வக்கீல்.

No comments:

Post a Comment